science

img

வெற்றிகரமாக பாய்ந்தது சந்திரயான்-2

பெங்களூரு, ஜூலை 22- நிலவில் ஆய்வை மேற்கொள்ளவிருக்கும் சந்திரயான்-2 விண்கலம், அதிக திறன்கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட் மூலம் திங்கட்கிழமை பிற்பகல் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து திங்கட்கிழமை பிற்பகல் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் ஏவப்பட்டது. இதற்கான 20 மணி நேர கவுன்ட் - டவுன் ஞாயிற்றுக்கிழமை காலை 6.51 மணிக்குத் தொடங்கி திங்கட்கிழமை பிற்பகல் 2.43க்கு நிறைவடைந்தது. உடனடியாக சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 16 நாட்கள் கழித்து நிலவை நோக்கிப் பயணம் புவி சுற்று வட்டப் பாதை, பூமியின் தரைப்பகுதியிலிருந்து சுமார் 170 கி.மீ உயரத்தில் இருக்க கூடிய பகுதியாகும். ஜிஎஸ்எல்வி ராக்கெட் அங்கு சென்றடைய  14 நிமிடங்கள் மற்றும் 59 வினாடிகள் ஆனது. ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு திட்டமிட்ட புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும் சந்திரயான்-2 விண்கலம், தொடர்ந்து  16 நாட்கள் புவி சுற்றுவட்டப் பாதையிலேயே வலம் வந்துகொண்டிருக்கும். அதன் பின்னர், 17-வது நாள் நிலவை நோக்கி விண்கலம் நகர்த்தப்படும்.

தொடர்ந்து 5 நாட்கள் இந்த நகர்வு நடைபெறும். பின்னர் 22-வது நாளில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையை விண்கலம் சென்றடையும். அதன் பின்னர் தொடர்ந்து 28 நாள்கள் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் சுற்றி வரும். அப்போது, நிலவுக்கும் விண்கலத்துக்குமான தொலைவு படிப்படியாகக் குறைக்கப்பட்டு நிலவிலிருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றிவரும் வகையில் விண்கலம் கொண்டு வரப்படும். பின்னர் ராக்கெட் ஏவப்பட்ட 50-வது நாளில் செப்டம்பர் 2-ஆம் தேதி விண்கலத்தின் ஆர்பிட்டர் (மையம்) பகுதிக்குள் இருந்து லேண்டர் விண்கலத்தின் (தரையிறங்கும் பாகம்) பிரித்துவிடப்படும். இந்த லேண்டர் பகுதி தொடர்ந்து 4 நாட்கள் நிலவைச் சுற்றி வந்து, செப்டம்பர் 6-ஆம் தேதி (54-வது நாள்) நிலவின் தென் துருவத்தில் மெதுவாகத் தரையிறக்கப்படும். லேண்டர் தரையிறங்கிய 4 மணி நேரத்துக்குப் பின்னர், அதனுள் இருக்கும் 6 சக்கரங்களுடன் கூடிய ரோவர் கலம் இறக்கிவிடப்படும்.

ஆர்பிட்டர்

2,379 கிலோ எடைகொண்ட ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் ஓராண்டு சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொண்டு, தகவல்களை பூமிக்கு அனுப்பும். இதற்காக அதில் அதிநவீன கேமரா, நிலவின் பரப்பை ஊடுருவி ஆய்வு செய்யும் எக்ஸ்ரே கருவிகள், நிலவின் பரப்பு மற்றும் படிமங்களாக இருக்கும் கனிமங்கள் குறித்த தகவல்களைத் தரக்கூடிய ஐ.ஆர்.ஸ்பெக்ட்ரோமீட்டர் உள்ளிட்ட 8 கருவிகள் ஆர்பிட்டரில் இணைக்கப்பட்டிருக்கும்.

லேண்டர்

ஆர்பிட்டரிலிருந்து பிரித்து விடப்படும் 1,471 கிலோ எடைகொண்ட “விக்ரம்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் லேண்டர் பகுதி 14 நாள்கள் ஆய்வை மேற்கொள்ளும். இதில் நிலவின் பரப்பில் ஏற்படும் அதிர்வுகளை ஆய்வு செய்யும் சீஸ்மோ மீட்டர், வெப்பநிலையை ஆய்வுசெய்யும் கருவிகள் என 3 கருவிகள் இடம்பெற்றிருக்கும். நிலவில் தரையிறங்கிய 15-வது விநாடியிலிருந்து ஆய்வுத் தகவல்களையும், புகைப் படங்களையும் பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும், ஆர்பிட்டருக்கும் விக்ரம் கொடுக்க ஆரம்பிக்கும்.

ரோவர்

27 கிலோ எடைகொண்ட “பிரக்யான்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் 6 சக்கரங்களுடன் கூடிய ரோவர் வாகனம், நிலவின் பரப்பில் 14 நாள்கள் நகர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும். ஒரு விநாடிக்கு 1 செ.மீ. என்ற வேகத்தில் 500 மீட்டர் தூரம் வரை நிலவின் பரப்பில் ரோவர் வாகனம் நகர்ந்து செல்லும். இதில் நிலவின் பரப்பில் நீர் மூலக்கூறுகள், சோடியம், மெக்னீசியம், அலுமினியம், சிலிகான், கால்சியம், டைட்டேனியம், இரும்புத் தாது உள்ளிட்ட கனிமங்கள் குறித்து ஆய்வை மேற்கொள்வதற்கான எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர், லேசர் கதிர்வீச்சு மூலம் இயங்கும் கருவி என இரண்டு கருவிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

உலக நாடுகளில் முதல் முறை

இதுவரை எந்தவொரு உலக நாடும் அனுப்பாத நிலவின் தென்துருவப் பகுதிக்கு இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலம் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவின் பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கும் முதல் முயற்சியில் இந்தியா ஈடுபடுகிறது. இதுபோன்ற பல்வேறு சாதனைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் படைக்க உள்ளதால், சந்திரயான்-2 திட்டம் இந்திய மக்களிடையே மட்டுமின்றி, உலக நாடுகளிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சந்திரயான்-1 விண்கலம்
இஸ்ரோ முதலில் நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலத்தை கடந்த 2008 அக்டோபர் 22-ம் தேதி விண்ணுக்கு அனுப்பியது. நிலவின் வடதுருவத்தில் தரையிறங்கி 312 நாள்கள் ஆய்வை மேற்கொண்ட இந்த விண்கலம், நிலவின் பரப்பில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. மேலும், மெக்னீசியம், அலுமினியம், சிலிக்கான் போன்ற தாதுக்களும் நிலவின் பரப்பில் படிமங்களாக இருப்பதையும் சந்திரயான்-1 கண்டறிந்தது. சந்திரயான்-1 விண்கலம் பி.எஸ்.எல்.வி.-சி11 ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. இப்போது அதன் அடுத்தகட்டமாக ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த விண்கலத்துடன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் “ரெட்ரோ ரிப்ளெக்டர்’ என்ற கருவியையும் சந்திரயான் -2 நிலாவுக்கு  கொண்டு செல்கிறது. நிலவில் மனிதர்கள் குடியிருக்க சாத்தியமான இடங்களில் ஒன்றாக தென்துருவம் கருதப்படுகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளை யும் சந்திரயான் -2 ஆய்வு நமக்குத் தர உள்ளது. அதன் மூலம், நிலவில் மனிதன் வாழ முடியுமா என்பது குறித்து உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு சந்திரயான்-2 திட்டம் முன்மாதிரியாக விளங்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

இந்தியாவின் வரலாற்றுப் பயணம்

ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு கட்டுப்பாட்டு அறையில் இருந்து விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் சிவன் கூறிய வார்த்தைகள்.

சந்திரயான் - 2 பயணத்தின் மூலம்தான் இந்தியா தனது விண்வெளி ஆய்வில் அடுத்த கட்டத்தை எட்டிப்பிடிக்கவிருக்கிறது. ஏற்கனவே சந்திராயன் -1-ன் மூலம் நிலவின் சுற்றுப்பாதைக்கு விண்கலத்தை இந்தியா அனுப்பியிருக்கிறது. இருந்தாலும், முதன் முறையாக இந்தப் பயணத்தின் மூலம்தான் இந்தியா அனுப்பும் கருவிகள் நிலவில்  தரையிறங்குகின்றன.  சந்திரயான் - 2-ஐ சுமந்து சென்ற புவிசார் செயற்கைக்கோள் ஏவு வாகனம்  - ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் - திட்ட மிட்ட தூரத்தைவிட கூடுதலாக பறந்திருப்பதாகவும் இதனால் சந்திர யானைக் கட்டுப்படுத்த கூடுதல் கால அவகாசம் கிடைத்திருக்கிறது. சந்திர யானின் பயணத்தில் நாளை செய்ய  வேண்டிய பணிகள் இன்றே முடி வடைந்தது.

இது நிலவை நோக்கிய இந்தியா வின் வரலாற்றுப் பயணத்தின் தொடக்கம். கடந்த வாரம் ராக்கெட் ஏவு வதற்கு முன்பாக தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதும் விஞ்ஞானிகள் இரவு பகலாக பணி யாற்றி, அதனை ஒன்றரை நாட்களுக் குள் சரிசெய்தனர். அந்தப் பணிகள் சரி யாக நடைபெற்றிருக்கிறதா என்ப தையும் சோதித்து உறுதிசெய்தனர். இந்த மிகப்பெரிய திட்டம் இஸ்ரோ குழுவின் கடினமான உழைப்பால் சாத்தியமானது. குறிப்பாக பொறி யாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர் கள் மற்றும் பிற ஊழியர்கள் இதற்காக தொடர்ந்து பணி செய்தனர். “சந்திரயான் - 2 திட்டத்தை சாத்திய மாக்கிய அனைவருக்கும் பணிவார்ந்த நன்றிகளை தெரிவிப்பது எனது கடமை.

இத்தோடு பணிகள் முடிவடைந்து விடவில்லை. அடுத்த ஒன்றரை மாதத்திற்கு தொடர்ச்சியாக பணிகள் ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் தரை யிறங்கி, அதிலிருந்து பிரக்யான் வாகனம் நிலவில் உலாவ ஆரம்பிக்கும் 15 நிமிடங்கள்தான் இந்தத் திட்டத்தில் மிக முக்கியமானவை. இந்தியா மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகமும் இதற்காக காத்திருக்கிறது.


 

;